ஊடக அறிக்கை TCC UK. – தமிழின அழிப்பின் பங்காளி ரில்வின் சில்வாவிற்கு எதிராக பிரித்தானியாவில் வெகுண்டெழுந்த தமிழ் மக்கள்!

81

ஊடக அறிக்கை
24.11.2025

தமிழின அழிப்பின் பங்காளி ரில்வின் சில்வாவிற்கு எதிராக பிரித்தானியாவில் வெகுண்டெழுந்த தமிழ் மக்கள்!

நேற்று, 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரித்தானியாவின் அல்பேட்டன் பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்பாக கடும்போக்கு சிங்கள பௌத்த இனவாதியும், தமிழின அழிப்பின் பங்காளருமான ரில்வின் சில்வாவுக்கு எதிராக தமிழ் மக்கள் அணிதிரண்டு மாபெரும் போராட்டத்தை நடாத்தியிருந்தனர்.

வரலாற்று ரீதியாக, 1983 ஆம் ஆண்டு (கறுப்பு யூலை) இன அழிப்புக்கு முன்னரும் பின்னரும், தமிழின அழிப்பையே தமது சித்தாந்தமாகக் கொண்டு செயற்பட்டவர் ரில்வின் சில்வா. முள்ளிவாய்க்காலில் தமிழ் இனம் மீது நிகழ்த்தப்பட்ட பேரழிவின்போது, மகிந்த, கோத்தபாய, சரத் பொன்சேகா உள்ளிட்ட இராணுவ அரச கட்டமைப்பினால் நடாத்தப்பட்ட தமிழின அழிப்பிற்கான யுத்தத்தில், இன்றைய ஆளும் JVP/NPP இன் பிரதானியும் இதே சிந்தனைவாதியுமான ரில்வின் சில்வா, இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட இனவாதிகளுடன் இணைந்து, அரச இராணுவ இயந்திரத்திற்குப் பெரும் பக்கபலமாக நின்றவர்கள் என்பதை தமிழ் மக்கள் நினைவில் கொண்டு இப்போராட்டத்தை நடாத்தினர்.

சிங்கள மக்களைச் சந்திப்பதற்காக பிரித்தானியா வந்திருந்த தமிழின அழிப்பாளர்களில் ஒருவரான ரில்வின் சில்வாவின் வாகனத்தை தமிழ் மக்கள் வழிமறித்து நிறுத்தினர். ஆக்ரோஷமான கோஷங்களை எழுப்பி அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் சில்வாவின் வாகனத்தைப் பாடசாலையின் வாயில் வழியாக நகர்த்த மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அங்கு நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தரப்பினர் உதவியுடன் மிகுந்த பிரயத்தனங்களுக்கு மத்தியில் அவரது வாகனத்தை அங்கிருந்து நகர்த்திச் சென்றனர். இதேவேளை போராட்டத்தின்போது, அங்கு வருகை தந்த சிங்கள மக்களுக்கும், அவர்களது வாகனங்கள் உள்ளே செல்வதற்கும் தமிழ் மக்கள் தமது சுய ஒழுங்கமைப்பில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

நேற்றைய போராட்டம் என்பது தம் சொந்த உறவுகளை சிங்கள பேரினவாதத்திடம் பறிகொடுத்த மக்கள் திரண்டெழுந்து தம் இனத்தின் அழிவுக்கு காரணமான இனப் படுகொலையாளருக்கு எதிராக தொடுத்த உரிமைக்கும் நீதிக்குமான போராட்டமாகும்.

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுத்த அவசர அழைப்பை ஏற்று, தமிழ் தேசியத் தளத்தில் இயங்கி வரும் தேசிய செயற்பாட்டாளர்களும், உணர்வாளர்களும், பொதுமக்களுமாக ஒருமித்து நின்று போராட்டத்தைப் பலப்படுத்தினர். இந்த நிகழ்வு, சிங்களப் பேரினவாத அரசுக்கும் ரில்வின் சில்வா போன்ற இனவாதிகளுக்கும் காத்திரமான அரசியல் செய்தியைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. தமிழின அழிப்பின் பங்காளிகளின் சுதந்திரமான வருகையை எமது மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்! எம் இனத்திற்கான நீதியைப் பெறும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்!

நேற்றைய போராட்டத்தின் அதிர்வானது, சிங்கள பௌத்த பேரினவாதிகளை மட்டுமல்லாது, இறுதி யுத்தம் வரை இவர்களோடு இணைந்து செயற்பட்ட ஒட்டுக் குழுக்களையும் சினம் கொள்ள வைத்து, இனவழிப்பாளர்களை நியாயப்படுத்தி ஊடகச் சந்திப்புக்கள் மூலம் பிணை எடுக்கும் பிரயத்தனங்களைச் செய்ய வைத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. தமிழீழ மக்களால் நிராகரிக்கபட்ட இவ்வாறான எம் தேசத்தின் விரோதிகள் தொடர்பாக தொடர்ந்தும் எம் மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மீண்டும் வலியுறுத்தி நிற்கிறது .

TCC-UK

Previous articleமாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு
Next articleஅகவை 71